செய்திகள்

வணிக வளாக தீ விபத்தில் 64 உயிர்கள் பலி - ரஷியாவில் நாளை தேசிய துக்கதினம்

ரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள வணிக வளாக தீ விபத்தில் 64 உயிர்கள் பலியானதற்கு நாடு முழுவதும் நாளை தேசிய துக்கதினம் அனுசரிக்குமாறு அதிபர் புதின் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாலை மலர்

ரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ளது கெம்ரோவோ நகரம். இங்குள்ள வின்ட்டர் செர்ரி மால் வணிக வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பலர் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அந்த மாலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு குவிந்திருந்த மக்கள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடினர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில் 41 பேர் குழந்தைகள் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீ விபத்து நிகழ்ந்த வணிக வளாகத்தை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.