கிருஷ்ணகிரி:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு பதிவறை எழுத்தருக்கு இணையான ஊதியம் மாற்றம் வழங்க வேண்டும். அதற்கான அரசாணையை உடனடியாக தமிழக அரசு வெளியிட வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மூன்றாவது நாளான நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தார்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலளளர் காமராஜ், துணைத்தலைவர் சையத்பயாஸ் அகமத், ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் கோபாலகண்ணன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில் மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணி நன்றி கூறினார். #tamilnews