செய்திகள்

கவர்னரின் நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் எதிர்க்க மறுக்கின்றனர்: டி.ராஜா எம்.பி. குற்றச்சாட்டு

ஊழல் காரணமாக கவர்னரின் நடவடிக்கைகளை ஆட்சியார்கள் எதிர்க்க மறுக்கின்றனர் என டி.ராஜா எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. டி.ராஜா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறிப்பிடும்படி இல்லை. கவர்னர் என்பவர், அரசியல் வட்டத்துக்கு அப்பாற்பட்டவர். அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தமிழக கவர்னரின் செயல் ஏற்கக்கூடியது அல்ல. ஊழல் காரணமாக, கவர்னரின் இந்த செயல்களை முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் எதிர்க்க மறுக்கிறார்கள்.

தமிழக மீனவர்கள் மீது கடற்படை தாக்குதல் நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து மத்திய அரசு உரிய விசாரணை நடத்தி தெளிவுபடுத்த வேண்டும். குஜராத் மாநில தேர்தலை கருத்தில் கொண்டே பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டுவதற்கு மத்திய அரசு மறுத்து வருகிறது. மேலும், கூட்டத்தொடரின் நாட்களையும் குறைக்க முயற்சி செய்வதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.