பெங்களூர்:
இவர்கள் பெங்களூர் வழியாக மைசூரு செல்லும் ரெயிலில், இரவு நேரங்களில் பயணிகள்போல் ஏறி, ரெயில் கதவு அருகே அமர்ந்திருக்கும் பயணிகளை முதலில் குறி வைப்பார்கள். பின்னர், அவர்களை கத்தியை காட்டி மிரட்டி பணம், தங்க சங்கிலி, மோதிரம், செல்போன் ஆகியவற்றை பறிப்பார்கள்.
பின்னர் அந்த கொள்ளையர்களில் ஒருவன், ரெயில் சங்கிலியை பிடித்து இழுப்பான். ரெயில் நின்றதும், அவர்கள் 5 பேரும் குதித்து ஓடி விடுவார்கள். வெவ்வேறு சம்பவங்களில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்து ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் குவிந்ததையடுத்து அவர்கள் கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், பெங்களூரு நாயண்ட ஹள்ளி அருகே உள்ள விநாயக நகரை சேர்ந்த கீர்த்திராஜ் (வயது 24), சந்திரா லேஅவுட் பகுதியை சேர்ந்த சுனில் (22), பனசங்கரி பகுதியில் வசிக்கும் குணமஞ்சா (24), நாயண்டஹள்ளி அபிஷேக் (25) மற்றும் பரத் (20) ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் சிக்கியது.
பின்னர் ரெயில்வே போலீசார் அவர்களை கைது செய்து, கொள்ளை கும்பலிடம் இருந்து 24 கிராம் தங்க சங்கிலி, 3 தங்க மோதிரம், 10 மொபைல் போன்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 5 வாலிபர்களும், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.