செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே டிராவல்ஸ் அதிபரிடம் ரூ.40 லட்சம் அபேஸ்

கிருஷ்ணகிரி அருகே டிராவல்ஸ் அதிபரிடம் போலீஸ் என கூறி ரூ.40 லட்சம் பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.

கிருஷ்ணகிரி:

உத்தரபிரேத மாநிலம் லக்னோ, லட்சுமணபுரி பகுதியை சேர்ந்தவர் ஆசிஸ் அகர்வால்(வயது 28). இவர் டிராவல்ஸ் ஏஜேன்சி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். மேலும் ரியஸ் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கு ஆன்லைன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஒரு கும்பல் நிலம் தொடர்பான ஒரு தகவல் அனுப்பியது. அந்த தகவலில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் குறைந்த விலைக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் தொழிற்சாலை வைத்தால் அல்லது நிலத்தை நீங்கள் வாங்கி விற்றால் பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என கூறியிருந்தனர்.

இதனை நம்பி அவர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஆசிஸ் அகர்வால், நிலத்திற்கான மதிப்பு எவ்வளவு என்றும், அதனை பத்திர பதிவு செய்ய எவ்வளவு தொகை ஆகும் என கேட்டு விசாரித்தார். இதையடுத்து அந்த கும்பல் நிலத்திற்கு ரூ.40 லட்சம் ஆகும். உடனே கொண்டு வாருங்கள் இல்லை என்றால் வேறு ஒரு நபருக்கு கைமாறி விடும் என தெரிவித்தனர். மேலும் பணத்தை எங்கு கொண்டு வரவேண்டும் என்றும் கூறினர்.

உடனே ஆசிஸ் அகர்வால் புறப்பட்டு ஓசூருக்கு வந்து அங்குள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.40 லட்சம் பணத்தை எடுத்தார். பின்னர் மர்ம கும்பலை சேர்ந்த முகேஸ் என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு குருபரப்பள்ளி அருகே உள்ள சிக்காரி மேடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு பணத்துடன் வருமாறு கூறினர்.

அவர் கூடியபடி ஆசிஸ்அகர்வால் அங்கு சென்றார். அங்கு ஓட்டலில் முகேஸ் மற்றும் 4 பேர் போலீஸ் உடையில் இருந்தனர். அவர்கள் நாங்கள் போலீஸ் என கூறி மிரட்டி ரூ.40 லட்சம் பணத்தையும் ஆசிஸ்அகர்வாலிடம் இருந்து பறித்துக் கொண்டு சென்றனர்.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் குருபர பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.