செய்திகள்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.38 லட்சம் மோசடி - தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.38 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மாலை மலர்

தேனி:

சேலம் மாவட்டம் ஆயர்பாடியைச் சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 30). படித்து முடித்து வேலைக்காக முயற்சி செய்து வந்த நிலையில் பெரியகுளம் ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்துள்ளார்.

இதனால் செல்ல முத்து மற்றும் அவரது நண்பர்கள் 18 பேர் அவரை அணுகியுள்ளனர். அவர்கள் ரூ.38 லட்சம் பணத்தை மணிகண்டன் மற்றும் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் புன்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த சம்ஸ் ரகுமானிடம் கொடுத்துள்ளனர். ஆனால் சொன்னபடி அவர்கள் வேலை வாங்கித் தரவில்லை. பல நாட்களாக ஏமாற்றி வந்ததால் அவர்கள் சந்தேகமடைந்தனர்.

சம்பவத்தன்று செல்லமுத்து பெரிய குளத்துக்கு வந்து இது தொடர்பாக கேட்ட போது பணம் தர முடியாது என்றும், மீறி கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இது குறித்து தென்கரை போலீஸ் நிலையத்தில் செல்லமுத்து புகார் அளித்தார். அதன் பேரில் மணிகண்டன், சம்ஸ் ரகுமான் மற்றும் அவரது மனைவி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.