செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்தால் தமிழக படகு உரிமையாளர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்: இலங்கை மந்திரி பேட்டி

எல்லை தாண்டி மீன் பிடித்தால், தமிழக படகு உரிமையாளர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம் என்று இலங்கை மீன்வளத்துறை மந்திரி தெரிவித்தார்.

மாலை மலர்

கொழும்பு:

இலங்கை பாராளுமன்றத்தில் மீன்வளத்துறை தொடர்பான விவாதம் வருகிற 6-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள், குறைகள் ஆகியவை விவாதிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் இலங்கை மீன்வளத்துறை மந்திரி மஹிந்த அமரவீரா, இலங்கையின் தென்பகுதியான திரிகோணமலை, மட்டக்களப்பு உள்பட சில பகுதிகளில் உள்ள மீனவர்களின் குறைகள், பிரச்சினைகள் குறித்து அவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை முடித்த பின்னர், மீன்வளத்துறை மந்திரி மஹிந்த அமரவீரா மட்டக்களப்பு பகுதியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ‘இலங்கை கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களின் 162 படகுகள் இலங்கை வசம் இருக்கிறது. முதற்கட்டமாக தமிழக மீனவர்களின் படகுகளில் 40 முதல் 80 படகுகள் விடுவிக்கப்படலாம்’ என்றார்.

அதையடுத்து, நிருபர்கள் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வருவதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், ‘தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்து சிறை பிடிக்கப்பட்டால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டு, அவர்கள் வந்த படகு உரிமையாளர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம் என்றும், அதுதொடர்பான சட்டத்தை 6-ந் தேதி பாராளுமன்றத்தில் இயற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது’ என்றும் தெரிவித்தார்.