கோப்பு படம் 
செய்திகள்

ராமநாதபுரத்தில் மெடிக்கல் சீட் வாங்கித்தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி

ராமநாதபுரத்தில் மருத்துவக்கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி நடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தை சேர்ந்தவர் அல்அமீன். இவரது மனைவி அல்பத்துருன் நிசா. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி ராமநாதபுரத்தில் உள்ள தனியார் டிராவல் ஏஜென்சிக்கு வெளியூர் செல்வதற்காக டிக்கெட் பதிவு செய்ய சென்றுள்ளார்.

அப்போது அங்குள்ள பெண் ஊழியர் இவரது மகளின் மருத்துவபடிப்பு குறித்து விசாரித்துள்ளார். அப்போது அங்கிருந்த ஒருவர் நடிகர் ஒருவரின் அறக்கட்டளையில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும், வேலூர் சி.எம்.சி. மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி தர முடியும் என்றும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய அல்பத்துருன் நிசா முதல் தவணையாக 4 லட்சத்து 50 ஆயிரம் அந்த நபர் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

இதே போல் தொடர்ந்து பல்வேறு தவணைகளில் மொத்தம் 18 லட்சத்து 26 ஆயிரத்து 161 ரூபாய் பெற்றுக்கொண்ட நபர் மருத்துவ சீட் வாங்கி கொடுக்கவில்லை.

இவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மொபைல் சுவிட்ச்ஆப்பில் இருந்தது.இதனால் ஏமாற்றமடைந்த அல்பத்துருல் நிசா ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

புகாரை விசாரித்த போலீசார் வங்கி கணக்கு எண்ணை பரிசோதித்தபோது அது போலியான கணக்கு என தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.