சென்னை:
சென்னையில் போலி நகைகளை அடகுக் கடைகளில் அடமானம் வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றியதாக அடகுக் கடைகள் புகார் அளித்தன. இந்த புகாரை ஆய்வு செய்த காவல்துறை, தீவிர கண்காணிப்புக்குப் பிறகு கொளத்தூரைச் சேர்ந்த மாதவன் என்பவரை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட மாதவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மைலாப்பூர், பெரம்பூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 20 கடைகளில் போலி நகைகளை தலா 70 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து பணம் பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்த 80 ஆயிரம் ரொக்கம், போலி தங்க செயின் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.