செய்திகள்

தொடரும் இடையூறுகள்- மாநிலங்களவை விதிகளை மறு ஆய்வு செய்ய சபாநாயகர் முடிவு

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் உறுப்பினர்களின் இடையூறுகள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலங்களவை விதிகளை மறு ஆய்வு செய்ய சபாநாயகர் முடிவு செய்துள்ளார். #disruptions #venkaiahnaidu

மாலை மலர்

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் பெரும்பாலான நேரம் எதிர்க்கட்சிகளின் அமளியால் வீணடிக்கப்பட்டுள்ளது. நடப்பு கூட்டத் தொடரைப் பொருத்தவரை, காவிரி மேலாண்மை வாரியம், பஞ்சாப் நேசனல் வங்கி கடன் மோசடி மற்றும் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவிவருகிறது. 

இந்நிலையில் மாநிலங்களவையில் ஓய்வு பெறும் எம்.பி.க்களுக்கு இன்று பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஓய்வு பெறும் உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. கடும் அமளிக்கிடையில் பிரியாவிடை உரை நிகழ்த்திய உறுப்பினர்கள், இடையூறுகளால் தொடர்ந்து அவை முடங்குவது குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்து பேசினர். மேலும், மாநிலங்களவை விதிகள் மற்றும் நடைமுறைகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து பேசிய சபாநாயகர் வெங்கையா நாயுடு, மாநிலங்களவை விதிகளை மறு ஆய்வு செய்ய ஏற்கனவே முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். 

‘மாநிலங்களவை விதிகளை மறு ஆய்வு செய்து வரைவு தயாரிக்கப்பட்டதும் விதிகள் குழுவுடன் ஆலோசனை நடத்தப்படும். பின்னர் அதன் மீது பொது விவாதம் நடத்தப்பட்டு இறுதி செய்யப்படும்’ என்றார்  நாயுடு. #tamilnews #disruptions #venkaiahnaidu