திருவனந்தபுரம்:
வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு விமானம் மூலம் அதிகளவு தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதை கண்காணித்து கடத்தல் காரர்களை கைது செய்ய சுங்க இலாகா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அரபு நாடுகளில் இருந்து கேரளா வருபவர்களே அதிகளவு தங்க கடத்தலில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக பல்வேறு நூதன முறைகளில் தங்கள் கடத்தலை அரங்கேற்றுகிறார்கள்.
நேற்று சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் தங்க கடத்தல் நடப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ஏற்கனவே ரகசிய தகவல் வந்திருந்ததால் அவர்கள் பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது கண்ணூர் தலச்சேரியை சேர்ந்த முகம்மது நகாஸ் (வயது 24) என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது அவர் பேட்டரி சார்ஜருக்குள் 3.37 கிலோ தங்கத்தை நூதன முறையில் மறைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். அவரை கைது செய்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.