செய்திகள்

பா.ஜனதாவுக்கு ஆதரவாக செயல்படும் கிருஷ்ணசாமி தற்போது நீட் தேர்வு எழுத தயாரா?: ஆர்.எஸ்.பாரதி எம்.பி. பேட்டி

நீட் தேர்வு விவகாரத்தில் தொடர்ந்து பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்படும் டாக்டர் கிருஷ்ணசாமி தற்போது நீட் தேர்வு எழுத தயாரா? என்று ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

மாலை மலர்

நெல்லை:

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி தயவால் டாக்டரான தமிழிசை சவுந்தரராஜன் தற்போது நீட் தேர்வு எழுதுவாரா? இதே போல நீட் தேர்வு விவகாரத்தில் தொடர்ந்து பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்படும் டாக்டர் கிருஷ்ணசாமி தற்போது நீட் தேர்வு எழுத தயாரா? இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் நவம்பர் 17-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது தமிழக அரசு இந்த தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டுள்ளது.

எனவே தமிழக அரசு மீது உச்சநீதிமன்றம் கோபத்தில் உள்ளது. நாங்கள் ஏற்கனவே கேவியட் மனு செய்துள்ளோம். எனவே டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். இரட்டை இலை சின்னத்திற்காக தேர்தலை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது.

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை சின்னம் ஒரு பொருட்டல்ல. தமிழகத்தில் தேர்தல் எப்போது வந்தாலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.