செய்திகள்

வருமான வரி சோதனை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை: ஆர்.எஸ்.பாரதி எம்.பி.

தமிழகத்தில் நடந்து வரும் வருமானவரிச் சோதனை எதற்காக நடந்து வருகிறது என மத்தியஅரசால் விளக்கம் தரப்படவில்லை. இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

மாலை மலர்

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது தமிழகத்தில் நடந்து வரும் வருமானவரிச் சோதனை எதற்காக நடந்து வருகிறது என மத்தியஅரசால் விளக்கம் தரப்படவில்லை. இது மத்தியஅரசின் பழிவாங்கும் நடவடிக்கையாகும்.

தமிழகத்தில் இதுவரை நடந்த வருமானவரிச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்தியஅரசு தமிழகத்தை கிள்ளுக்கீரையாக எண்ணுகிறது.


அ.தி.மு.க. ஆட்சியின் போது பல ஊழல்கள் நடந்துள்ளது. ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு, சிறுதாவூர் பங்களாக்களிலும் வருமானவரிச்சோதனை நடத்த வேண்டும் என மக்களும், அ.தி.மு.க.தொண்டர்களும் விரும்புகிறார்கள்.

கடந்த 1 ஆண்டாகத்தான் இதுபோன்ற சோதனைகள் அதிக அளவில் நடக்கிறது. தமிழக அமைச்சர்கள் கோட்டைக்கு சென்று கோப்புகளை பார்ப்பதில்லை. நாட்டைபற்றி அவர்கள் சிந்திக்கவும் இல்லை.