செய்திகள்

காஸ்கஞ்ச் மோதல் விவகாரம் மாநிலங்களவையில் எதிரொலித்தது: உறுப்பினர்கள் அமளியால் அவை ஒத்திவைப்பு

காஸ்கஞ்ச் மோதல் தொடர்பாக விவாதிக்கும்படி மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால், மதியம் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாலை மலர்

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்துத்துவா அமைப்புகள் சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. பலர் இருசக்கர வாகனங்களில் தேசியக் கொடியுடன் அணி வகுத்துச் சென்றபோது, அவர்கள் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல் பரவியதால், இரு தரப்பினருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இந்த கலவரத்தில் வாகனங்கள், கடைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. கலவரத்தின்போது ஒரு கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த வன்முறை விவகாரம் இன்று மாநிலங்களவையில் எதிரொலித்தது. பட்ஜெட் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான இன்று மாநிலங்களவை காலை கூடியபோது, காஸ்கஞ்ச் மோதல் குறித்து சமாஜ்வாடி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல் டெல்லியில் கடைகளுக்கு சீல் வைக்கப்படுவதைக் கண்டித்து ஆம் ஆத்மி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கம் எழுப்பினர்.

காங்கிரஸ் எம்.பி. ராமச்சந்திர ராவ் அவையின் மையப்பகுதிக்கு வந்து, ‘ஆந்திராவுக்கு உதவுங்கள்’ என்று முழக்கமிட்டார். இதன் காரணமாக அவையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது.