செய்திகள்

ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடைகளில் ரூ. 700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 700 கோடி அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. #Joyalukkas #IRaid

மாலை மலர்

சென்னை:

சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் ‘ஜாய் ஆலுக்காஸ்’ நகைக்கடை உள்ளது. இதன் தலைமை அலுவலகம் கேரளாவில் இயங்கி வருகிறது.

ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு காஞ்சீபுரம், கோவை, திருப்பூர், மதுரை, ஈரோடு, நெல்லை, நாகர்கோவில், விழுப்பும், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் ஏராளமான கிளைகள் உள்ளன.

ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு செய்யப்பட் டுள்ளதாக புகார்கள் வந்தன. வரவு-செலவு கணக்குகளில் குளறுபடி ஏற்படுத்தி இந்த வரி ஏய்ப்பு நடப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதையடுத்து ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடைகளில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடைகளிலும், கேரளாவில் உள்ள உரிமையாளர் வீடு மற்றும் ஊழியர்களின் வீடுகளிலும் சோதனை நடந்தது. ஒரே நேரத்தில் 30 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடந்த போது ஊழியர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

நேற்று 2-வது நாளாக சோதனை நடந்தது. அப்போது உரிமையாளர் வீடு மற்றும் ஊழியர்களின் வீடுகளில் பல ஆவணங்கள் சிக்கின. இந்த ஆவணங்களை பார்த்த போது ரூ. 700 கோடி அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

பழைய தங்க நகைகளின் மதிப்பை குறைத்து காட்டி அதன் மூலம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் அதிகாரிகளின் கையில் கிடைத்துள்ளன.

இன்று ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடைகளில் 3-வது நாளாக தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. சோதனையின் முடிவில் மேலும் பல ஆவணங்கள் சிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #Joyalukkas #IRaid #TamilNews