செய்திகள்

ஊரக வேலை திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 51.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய மந்திரி தகவல்

ஊரக வேலை திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் 51.6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஊரக மேம்பாட்டு துறை இணை மந்திரி ராம் கிரிபால் யாதவ் தெரிவித்தார். #MGNREGA #Rs51600crorereleased

புதுடெல்லி:

ஊரக வேலை திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் 51.6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஊரக மேம்பாட்டு துறை இணை மந்திரி ராம் கிரிபால் யாதவ் தெரிவித்தார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வெவ்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு திட்டப்பணிகளுக்கான தொடர்ச்சியாக நிதி வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்காக ரூ. 51,600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊதியம் வழங்குவதில் ஏற்பட்ட தாமத்திற்கு இழப்பீடாக மட்டுமே ரூ. 75.89 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. போதுமான ஊழியர்கள் இல்லாததால் மாநிலங்களில் திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், சரியான நேரத்தில் வருகை பதிவேட்டை சமர்ப்பிக்காதது, ஊதியம் பெறுவோரின் பெயர்களை முறையாக தெரிவிக்காதது உள்ளிட்டவையே ஊதியம் வழங்க ஏற்பட்ட தாமதத்திற்கு காரணம் ஆகும்.

ஊதியம் வழங்கப்படாத நாள் ஒன்றுக்கு 0.05 விகிதம் என்ற கணக்கில் இழப்பீடு தொகையை பயனாளிகள் பெற்றுள்ளனர். ஊதியம் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ஊதியம் செலுத்துவது போன்று பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஆதார் இல்லாத பயனாளிகளுக்கும் அவர்களின் அஞ்சலக சேமிப்பு கணக்கு அல்லது வங்கி கணக்கில் ஊதியம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MGNREGA #Rs51600crorereleased #tamilnews

SCROLL FOR NEXT