செய்திகள்

ராமநாதபுரம் தொழில் அதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி- 12 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம் தொழில் அதிபரிடம் ஹெர்பல் ஆயில் சப்ளை செய்வதாக கூறி ரூ. 50 லட்சம் மோசடி செய்த லண்டன் மற்றும் டெல்லியை சேர்ந்த 12 பேர் மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மாலை மலர்

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசங்கர்(வயது40). இவர் ராமநாதபுரம் பாரதிநகரில் பிஸ்கட் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.

இவரது நிறுவனம் குறித்த தகவல்களை இண்டர் நெட் மூலமாக அறிந்து கொண்ட லண்டனில் வசிக்கும் பெர்னாண்டஸ், ஸ்டீபன் எட்மண்ட., ஜூலியானா ஆகியோர் தாங்கள் ஹெர்பால் ஆயில் தயாரிக்கும் நிறுவனம் வைத்துள்ளதாகவும் அதற்கான வினியோகம் செய்யும் உரிமையை தங்களுக்கு வழங்க தயாராக உள்ளதாகவும் இது தொடர்பான மற்ற விபரங்களை டெல்லியில் உள்ள தங்களது கம்பெனி நிர்வாகிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

இதை நம்பிய பாலசங்கர் டெல்லியில் உள்ள நபர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்களின் பேச்சை நம்பிய பாலசங்கர் அவர்கள் தெரிவித்தபடி கடந்த மாதம் ஏப்ரல் 5-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 16முறை வெவ்வேறு நபர்களின் வங்கி கணக்கிற்கு ரூ. 50 லட்சம் முன்பணமாக அனுப்பி உள்ளார்.

அவர்கள் தெரிவித்தபடி ஹெர்பல் ஆயில் அனுப்பி வைக்காமல் இழுத்தடித்து வந்தனர். இதையடுத்து டெல்லியில் உள்ள ஜோதி அகர்வால் என்பவரை தொடர்பு கொண்டு கேட்டபோது மேலும் கூடுதலாக பணம் கேட்டுள்ளார். இதை தொடர்ந்து விசாரித்த போது கூட்டாக சதி செய்து ஏமாற்றி விட்டதாக தெரிய வந்தது.

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவிடம் பாலசங்கர் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் ராம நாதபுரம் மாவட்ட குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி லண்டனில் வசிக்கும் 3 பேர் டெல்லியில் வசிக்கும் ஜோதி அகர்வால், ராஜாத் சிலாங்கி, மணீஸ் குமார் சிங் உட்பட 9 பேர் என மொத்தம் 12 பேர் மீது வழக்கப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.