செய்திகள்

கட்டுமான நிறுவன அதிபர் மீது ரூ.46 லட்சம் மோசடி புகார்

சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் கட்டுமான நிறுவன அதிபர் மீது ரூ.46 லட்சம் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

திண்டிவனத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். கட்டுமான நிறுவன அதிபரான இவர் இன்று சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

5 ஆண்டுகளாக கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நான் புதுச்சேரியில் சுனாமி திட்டப்பணி ஒப்பந்தங்களை பெற்று வேலை செய்து வந்தேன். அப்போது தனியார் நிறுவனம் ஒன்றின் நிர்வாகிகள் என்னை அணுகி ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளுமாறு கூறினர்.

அந்த நிறுவனத்துக்கு பணிகளை செய்து கொடுத்ததால் எனக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் தர வேண்டி இருந்தது. இதில் பேச்சுவார்த்தைக்கு பின்னர் ரூ.80 லட்சம் தருவதாக கூறினர். இதில் 34 லட்சம் மட்டுமே தரப்பட்டது. மீதி 46 லட்சம் ரூபாயை தராமல் இழுத்தடித்து வந்தனர்.

இதுபற்றி மயிலாப்பூரில் உள்ள நிறுவனத்தில் சென்று கேட்டபோது பணத்தை தரமறுத்தனர். நாங்கள் தகராறு செய்வதாக கூறி மயிலாப்பூர் போலீசை அழைத்தனர்.

என்மீதும் எனக்கு ஆதரவாக வந்த தமிழ்நாடு மணல் அள்ளும் எந்திர உரிமையாளர்கள் மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு வரவேண்டிய ரூ.46 லட்சம் பணம் கிடைக்க ஆவன செய்யுமாறும், நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மண் அள்ளும் எந்திர உரிமையாளர் சங்க தலைவர் கத்திப்பாரா ஜனார்த்தனமும், இதே பிரச்சனைக் காக கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து இன்று புகார் தெரிவித்தார். அதில் மயிலாப்பூர் போலீசார் இந்த வி‌ஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT