செய்திகள்

முதலையிடம் சிக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம்: தஞ்சாவூர் கலெக்டர் வழங்கினார்

தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலையிடம் சிக்கி உயிரிழந்த செல்லத்துரையின் குடும்பத்தாருக்கு தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட 4 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் சரகம்-15 விநாயகர் தெரு கிராமத்தை சேர்ந்த சின்னையனின் மகன் செல்லத்துரை(65) என்பவர் கடந்த மூன்றாம் தேதியன்று அணைக்கரை பாலம் கொள்ளிடம் ஆறு தென்கரையில், நீர்த்தேக்க பகுதிக்கு சென்றபோது, நீர்த்தேக்க பகுதியில் உள்ள முதலை தாக்கியதில் உயிரிழந்தார்.

இந்த செய்தியை அறிந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த சம்பவத்தில் உயிரிழந்த செல்லத்துரை குடும்பத்துக்கு வனத்துறை மூலம் உடனடியாக ரூ. 4 லட்சம் வழங்குமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்தும் மறைந்த செல்லத்துரையின் வீட்டுக்கு இன்று சென்ற தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதுடன் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட 4 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.