சென்னை நகரில் மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்ட திட்டப் பணிகள் முழுமையாக முடிந்து விட்டது.
விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கும், பரங்கிமலையில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கும் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. தற்போது சராசரியாக ஒரு நாளுக்கு 90 ஆயிரம் பேர் பயணம் செய்கிறார்கள்.
மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டபோது கட்டணம் அதிகமாக இருப்பதாக கருத்து எழுந்தது.
இதையடுத்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அளித்தது. வரிசையில் நின்று வாங்குவதை தவிர்க்க ஸ்மார் கார்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் மெட்ரோ ரெயில் நிர்வாகம், மாதாந்திர பாஸ் அட்டை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ரூ.2,500-யை செலுத்தி இந்த அட்டை பெற்றுக் கொள்ளலாம். மேலும் முன் பணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.