செய்திகள்

ஐஏஎஸ் அதிகாரி, ரெயில்வே பணி வாங்கித்தருவதாக தொழில் அதிபரிடம் ரூ. 24½ லட்சம் மோசடி

ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் ரெயில்வே துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ. 24½ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாலை மலர்

போரூர்:

கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் பெருமாள் நகரைச் சேர்ந்தவர் சதாசிவம் தொழில் அதிபர். இவர் அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

என்னுடைய நண்பர் மூலம் எனக்கு மாயவரம் பசுபதி அகரத்தைச் சேர்ந்த மணி வெங்கடகிருஷ்ணன் என்பவர் அறிமுகமானார் மணி வெங்கடகிருஷ்ணன் தனக்கு டெல்லியில் மத்திய அரசின் பல துறை அதிகாரிகள் உடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக என்னிடம் அடிக்கடி கூறி வந்தார்.

என்னுடைய மகள், மகன் ஆகிய இருவருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் ரெயில்வே துறையில் ஸ்டே‌ஷன் மாஸ்டர் வேலை வாங்கி தருவதாக என்னிடம் உறுதி அளித்தார்.

இதற்காக மணி வெங்கட கிருஷ்ணன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து என்னிடம் இருந்து இரண்டு தவணையாக மொத்தம் ரூ.24 லட்சத்து 50ஆயிரம் பெற்று கொண்டார். ஆனால் இதுவரை வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தராமல் தலைமறைவாகி விட்டார்.

வேலை வாங்கித் தருவதாக ரூ. 24½ லட்சம் மோசடி செய்த மணிவெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews