திருமலை:
திருப்பதி அடுத்த பாக்ராபேட்டை அருகே ரூ.15 லட்சம் மதிப்புள்ள 33 செம்மர கட்டைகளை வனப்பகுதியில் இருந்து வெட்டி கடத்த முயன்ற 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
திருப்பதி மண்டல வன அலுவலர் நாகார்ஜூன ரெட்டிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாக்ராபேட்டை வனச்சரகர் பட்டாபி தலைமையில், வனத்துறையினர் தலகோணா வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது 30-க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்கள் வனப்பகுதியிலிருந்து செம்மரங்களை வெட்டி தூக்கி வந்து கொண்டிருந்தனர்.
அவர்களை வனத்துறையினர்கள் பிடிக்க முயன்ற நிலையில் கடத்தல்காரர்கள் செம்மரங்களை வீசிவிட்டு தப்பி ஓடினர்.
அவர்களை வனத்துறையினர் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். திருப்பத்தூரை சேர்ந்த சிங்காரவேலு (25), காளியப்பன் (25), மகாதேவன் (35), சுரேஷ் (34), செல்வம் (32), திருவண்ணாமலை மாவட்டம் ஜம்னாமரத்தூரைச் சேர்ந்த கணேஷ் (27) ஆகியோரை கைது செய்து 793 கிலோ எடையுள்ள ரூ.15 லட்சம் மதிப்புள்ள 33 செம்மரக்கட்டைகள், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தப்பிஓடியவர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்து வருகிறது.