நுண்ணீர் பாசன திட்டம் 
செய்திகள்

மதுரை மாவட்டத்தில் நுண்ணீர் பாசன முறைக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு

மதுரை மாவட்டத்தில் நுண்ணீர் பாசன முறைக்கு ரூ. 15.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மதுரை:

மதுரை மாவட்டத்தில் பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் சொட்டுநீர், தெளிப்பு நீர் மற்றும் மழைநீர் தெளிப்பான்கள் அமைத்திட, சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் விவசாயத்துறை மூலம் வழங்கப்படுவதற்காக, நடப்பாண்டில் (2020-21) ரூ. 15.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இத்திட்டங்களில் பயனடைய விரும்பும் விவசாயிகள் நிலத்தின கணினி சிட்டா, அடங்கல், நிலவரை படம், ஆதார், குடும்ப அட்டை, சிறு குறு விவசாயிகள் சான்று, வங்கி கணக்கு புத்தக முன்பக்க நகல், மார்பளவுள்ள 2 புகைப்படங்களுடன் தங்களது பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொண்டு பெயரினை பதிவு செய்யலாம்.

மேலும் விபரங்களுக்கு மதுரை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள வேளாண் துணை இயக்குநர் (நீர்வடிப்பகுதி மற்றும் நுண்ணீர் பாசனம்) அலுவலகத்தினை விவசாயிகள் தொடர்பு கொள்ளுமாறு மதுரை மாவட்ட கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.