செய்திகள்

வெளிநாட்டில் இருந்து பெங்களூர் வந்த ரவுடி ஸ்ரீதரின் சமையல்காரர் கைது

வெளிநாட்டில் இருந்து பெங்களூர் வந்த ரவுடி ஸ்ரீதரின் சமையல்காரர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். இவர் மீது கொலை, ஆள் கடத்தல், நில அபகரிப்பு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் இருந்தது. போலீசார் தேடுவதை அறிந்ததும் 2012-ம் ஆண்டு போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார்.

கடந்த மாதம் 4-ந் தேதி கம்போடியா நாட்டில் உள்ள ஓட்டலில் ரவுடி ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கடந்த 15-ந் தேதி சென்னை கொண்டு வரப்பட்டது.

ரவுடி ஸ்ரீதர் தற்கொலையில் பல்வேறு சந்தேகங்கள் போலீசாருக்கு இருந்தது. மேலும் அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்ற விவரம் போலீசுக்கு தெரியவில்லை.

இதனால் அவருடன் நெருங்கி இருந்த கூட்டாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஸ்ரீதர் வெளிநாடு தப்பி செல்லும் போது காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த தேவேந்திரன் என்பவரை உடன் அழைத்து சென்றிருந்தார்.

அவர் ஸ்ரீதருக்கு சமையல்காரராக இருந்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீதர் இறந்த பின்னர் தேவேந்திரன் இந்தியா திரும்பி வரலாம் என்று போலீசார் நினைத்திருந்தனர். இதனால் தேவேந்திரன் பற்றி அனைத்து விமான நிலையத்துக்கும் ‘லுக்-அவுட்’ சர்க்குலர் அனுப்பி இருந்தார்கள்.

இந்த நிலையில் இன்று காலை வெளிநாட்டில் இருந்து பெங்களூர் விமான நிலையத்துக்கு தேவேந்திரன் வந்தார். அவரை அங்குள்ள போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி காஞ்சீபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தேவேந்திரனிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதன் பின்னர் ஸ்ரீதர் எப்படி இறந்தார்? தற்கொலைக்கான காரணம் என்ன? எந்தெந்த நாடுகளில் தங்கி இருந்தார்? அவருக்கு உதவியவர்கள் யார்-யார்? என்ற விவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.