வானூர்:
புதுவை தர்மாபுரியை சேர்ந்தவர் கோபால்தாஸ் (வயது 45). பிரபல ரவுடியான இவர் தற்போது தனியார் கம்பெனியில் காவலாளியாக உள்ளார்.
இவருக்கு மாலதி, ஜெயந்தி ஆகிய மனைவிகள் உள்ளனர். மாலதி புதுவையை சேர்ந்தவர். ஜெயந்தி விழுப்புரம் அருகே வானூரை அடுத்த பூத்துறை கிராமத்தை சேர்ந்தவர்.
ஜெயந்திக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் தற்போது வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். எனவே 2 மகள்களும் பூத்துறையில் உள்ள உறவினர் வீட்டில் உள்ளனர். பூத்துறைக்கு கோபால்தாஸ் தனது மகள்களை பார்ப்பதற்காக புதுவையில் இருந்து அடிக்கடி வருவது உண்டு.
அதன்படி நேற்று இரவு கோபால்தாஸ் பூத்துறை வந்தார். தனது மகள்களை பார்த்துவிட்டு புதுவை புறப்படும்போது திடீரென பலத்த மழை பெய்தது. எனவே கோபால்தாஸ் தனது மகள்கள் தங்கியிருந்த வீட்டுக்கு எதிரே உள்ள ஒரு கட்டிடத்தில் கட்டில்போட்டு படுத்திருந்தார்.
அப்போது 4 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் கையில் கத்தி மற்றும் அரிவாள்கள் வைத்திருந்தனர். இவர்களை பார்த்ததும் கோபால்தாஸ் அங்கிருந்து ஓட முயன்றார். கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் கோபால்தாசை சரமாரியாக வெட்டியது. அதன் பின்னர் அந்த கும்பல் கோபால்தாஸ் தலைமீது கற்களை தூக்கி போட்டது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தவாறு பிணமானார்.
மழைநீருடன் சேர்ந்து ரத்தமும் கலந்து ஓடியது. தங்களது திட்டம் நிறைவேறியதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. சத்தம் கேட்டு எதிர் வீட்டில் இருந்த கோபால் தாசின் மகள்கள் ஓடிவந்தனர். தனது தந்தை பிணமாக கிடப்பதை பார்த்து கதறி துடித்தனர்.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
தகவல் அறிந்த கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. அஜைதங்கம், வானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கோபால்தாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொலையாளிகள் பற்றி துப்புதுலக்க மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது பூத்துறையில் இருந்து புதுவை செல்லும் சாலையில் ஓடி நின்றது. எனவே கொலையாளிகள் அந்த வழியாக தப்பி சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு புதுவையை சேர்ந்த ரவுடி மாயவன் என்பவரை கோபால்தாஸ் வெட்டி கொலை செய்துள்ளார். எனவே மாயவன் கூட்டாளிகள்தான் பழிக்குபழியாக இந்த கொலையை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதன் அடிப்படையில் போலீசார் கொலையாளிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.