கைது 
செய்திகள்

கொலை வழக்கில் ஆயுள்தண்டனை - தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது

நாகர்கோவில் அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே வெள்ளமடம் சகாயம் நகரை சேர்ந்தவர் ராஜஜெபசேகர் (வயது 34).

இவர் கடந்த 2001-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். சாட்சி சொல்லக்கூடாது என்று கூறி இவரை கடந்த 2009-ம் ஆண்டு 4 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது.

இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் 4 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. இதில் வெள்ளமடம் சகாயம் நகரை சேர்ந்த பிரைட் (39), பிரின்ஸ், பாஸ்கர் ஆகிய 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது. 3 பேரும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். 2017-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டு கீழ் கோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்தது.

இதையடுத்து பிரின்ஸ், பாஸ்கர் இருவரும் கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். பிரைட் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஆரல்வாய் மொழி போலீசார் பிரைட்டை நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பிரைட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட பிரைட் ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்று உள்ளார்.