செய்திகள்

வங்கிக்கடன் மோசடி வழக்கில் கைதான விக்ரம் கோத்தாரி, மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி

வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரோட்டோமேக் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி மற்றும் ராகுல் கோத்தாரியின் ஜாமீன் மனுவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #VikramKothari #RotomacCase

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ரோட்டாமேக் பேனா தொழிற்சாலையின் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி மும்பையில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கொல்கத்தாவில் உள்ள அலகாபாத் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் உள்பட 5-க்கும் மேற்பட்ட வங்கிகளில் ரூ.800 கோடிக்கும் மேல் கடன் வாங்கி இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேங்க் ஆப் பரோடா அளித்த புகாரின் அடிப்படையில் விக்ரம் கோத்தாரி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகிறது. முதற்கட்டமாக கான்பூரில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதற்கிடையே, சட்டவிரோதமாக பணப்பறிமாற்றம் செய்ததாக அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. கோத்தாரி, அவரது மனைவி மற்றும் மகனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து, கடந்த 22-ம் தேதி, விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது மகன் ராகுல் கோத்தாரியை சி.பி.ஐ கைது செய்தது. அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.