கொடைக்கானல்:
அழகும், நறுமணமும் மிக்க ரோஜா பூக்களில் பலவகை உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை செடிகளில் தான் பூத்துக்குலுங்கும். ஆனால் இவற்றிற்கு மாறாக ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் மரங்களில் பூக்கும் கல் ரோஜா பூக்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திழுத்து வருகின்றன.
கொடைக்கானலில் பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ்வாக் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையே ரோஜா பூக்கள் பூத்துக்குலுங்கும். இதனால் அங்குள்ள ரோஜா செடிகளில் தற்போது பூக்கள் இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கிடையே மரங்களில் பூத்துக்குலுங்கும் கல் ரோஜா பூக்கள், சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றன. வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் பூக்கும் இந்த கல் ரோஜா பூக்களுக்கு மனம் கிடையாது. குளிர் காலத்தில் மட்டுமே இவை பூத்துக்குலுங்கும். இதனால் தற்போது கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன், கேமராக்களில் கல் ரோஜா பூக்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.