புதுடெல்லி:
டெல்லியில் பாபா வீரேந்தர் தீக்சித்துக்கு சொந்தமான 'ஆதியாத்மிக் விஷ்வ வித்யாலயா' இயங்கி வருகிறது. இங்கு சிறுமிகள் மற்றும் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் டெல்லி பெண்கள் ஆணையம் மற்றும் குழந்தைகள் நலக் குழுவினர் போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
இச்சோதனையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அந்த ஆசிரமத்தில் பல சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 41 சிறுமிகளை போலீசார் மீட்டனர்.
இதையடுத்து ஆசிரமத்தில் பெண்கள், சிறுமிகள் சித்ரவதை செய்தது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. தீக்சித் மீது இரண்டு வழக்குகள் மற்றும் ஆசிரமத்தில் அதிகாரிகள் சோதனை செய்தபோது தகராறில் ஈடுபட்ட நபர் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரோகினியில் உள்ள பாபா வீரேந்திர தேவ் தீக்சித்தின் ஆசிரமத்தை இடிக்கும் பணியில் டெல்லி மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், ரோகினி ஆசிரமத்திற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆசிரம உரிமையாளர் விரேந்திர திக்சித்தை கண்காணிக்கப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
மேலும் விஷ்வ வித்யாலயா என்ற பெயரை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று வீரேந்திர தீக்சித்தின் ஆசிரமத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.