கொள்ளை 
செய்திகள்

சேத்துப்பட்டில் 2 டாஸ்மாக் கடைகள் பூட்டை உடைத்து கொள்ளை

சேத்துப்பட்டில் 2 டாஸ்மாக் கடைகள் ஷட்டரை உடைத்து அங்கிருந்த பணம் மற்றும் பாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில் அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளில் கார்த்திக் பாண்டியன் என 2 விற்பனையாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று இரவு விற்பனை முடிந்து ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.

இன்று காலை கடைகளுக்கு வெளியில் உள்ள மதுபாட்டில்களை அப்புறபடுத்துவதற்காக சிலர் அந்த பகுதிக்கு சென்றனர். அப்போது 2 டாஸ்மாக் கடைகளிலும் கடப்பாறையால் ‌ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் வரதராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். வரதராஜ் சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது கார்த்திக் விற்பனையாளராக வேலை செய்த கடையில் ரூ.4,000 மற்றும் மது பாட்டில்களை எடுத்துக் கொண்டு பாண்டியன் என்பவர் வேலை செய்த டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து கதவை திறந்து உள்ளனர்.

அப்போது ஆள் நடமாட்டத்தை கண்டு தப்பியோடியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.