பத்மநாபபுரம்:
குமரி மாவட்டம் தக்கலை பரைக்கோடு பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், நாகர்கோவிலில் உள்ள கார் பழுது பார்க்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டுக்குள் சமையலறை கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.
அங்கு கணவன்- மனைவி இருவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர். கொள்ளையர்கள் வீட்டில் பல்வேறு இடங்களில் நகை, பணம் இருக்குமா? என்று தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் என்ன செய்வது என்று யோசித்துள்ளனர். அப்போது கொள்ளையர்களுக்கு பசி எடுத்ததாக தெரிகிறது.
உடனே சமையல் அறைக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கு சாப்பிட ஏதாவது இருக்குமா? என்று பார்த்துள்ளனர். மணக்க மணக்க ஒரு பாத்திரத்தில் மீன் குழம்பு இருந்துள்ளது. அதனையும், இன்னொரு பாத்திரத்தில் இருந்த சாப்பாட்டையும் எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் பக்கத்து வீட்டு மாடிக்கு சென்றுள்ளனர்.
அங்கு மொட்டை மாடியில் ஆற அமர அமர்ந்து மீன் குழம்பை சாப்பாட்டுடன் ருசித்து சாப்பிட்டுள்ளனர். வயிறு நிறைந்தவுடன் அங்கிருந்து சாவகாசமாக புறப்பட்டு சென்றுள்ளனர்.
காலையில் எழுந்து பார்த்த அந்த தொழிலாளியும், அவருடைய மனைவியும் சமையலறை கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் இருந்த நகை, பணம் திருடப்பட்டு இருக்குமோ? என்று அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அப்படி எதுவும் திருடப்படவில்லை. மாறாக சமையலறையில் இருந்த சாப்பாட்டு பாத்திரத்தை காணவில்லை. அதனை தேடினர். பக்கத்து வீட்டு மாடியில் கிடந்தது. அதன்பிறகே அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். திருட வந்த இடத்தில் மீன் குழம்பை ருசித்து சாப்பிட்ட கொள்ளையர்கள் பற்றி அந்த பகுதி மக்கள் நகைச்சுவையாக பேசிக்கொண்டனர்.
இதற்கிடையே அதே பகுதியில் பாக்கியம் என்பவரது வீட்டில் சமையலறை கதவை உடைத்து கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். சத்தம் கேட்டு பாக்கியம் எழுந்திருக்கவே மர்மநபர்கள் தப்பி சென்றுள்ளனர். இதுதொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.