செய்திகள்

சென்னை ஐஓபி வங்கியில் லாக்கர்களை உடைத்து ரூ.33 லட்சம் நகை-பணம் கொள்ளை

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லாக்கர்களை உடைத்து 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

சென்னை:

சென்னை விருகம்பாக்கத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது. இங்கு இன்று காலை ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்தனர். அப்போது, வங்கியின் சுவரில் துளையிடப்பட்டு, லாக்கர்கள் உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் அதிகாரிகளும் வங்கிக்கு வந்து, ஆய்வு செய்து வருகிறார்கள்.

வங்கியில் உள்ள 2 லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்து 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்ய உள்ளனர். #tamilnews