திருச்சி:
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் நேற்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. மண்டல அளவில் நடந்த இந்த போராட்டத்துக்கு மாநில தலைவர் சண்முகராஜா தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், துணை பொதுச்செயலாளர் ராஜா சிதம்பரம், துணைத்தலைவர் செல்லச்சாமி, மாவட்ட தலைவர்கள் சரவணன் (திருச்சி) , செங்குட்டுவன் (புதுக்கோட்டை) , நாகராஜ் (தஞ்சை) , சட்டையப்பன் (நாகை) உள்பட திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த சாலைப்பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தின்போது 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். இறந்த சாலைப்பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். சாலைபராமரிப்பு பணிகளை தனியாருக்கு விடுவதை கைவிட வேண்டும். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பி, வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. பின்னர், அந்த சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் சென்று கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்தனர்.