வேலூர்:
வேலூர் அடுக்கம்பாறை அருகே உள்ள மூஞ்சூர்பட்டு காலனி பகுதியில் அம்பேத்கர் சிலை உள்ளது. அவரது நினைவு நாளையொட்டி சிலையின் அருகே அங்குள்ள இளைஞர்கள் அம்பேத்கர் படங்களுடன் டிஜிட்டல் பேனர் வைத்திருந்தனர்.
நேற்று இரவு மர்ம நபர்கள் பேனரில் 2 இடங்களில் கிழித்துள்ளனர். இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
பேனரை கிழித்தவர்களை கைது செய்யக்கோரி அங்குள்ள மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் பேனரை கிழித்த சம்பவத்தில் 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.