ஆம்பூர் அருகே கண்டெய்னர் லாரிக்குள் கார் புகுந்து நொறுங்கியதில் முன்னாள் எம்.எல்.ஏ., அவரது மனைவி, டிரைவர் பரிதாபமாக இறந்தனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் சுந்தரவேல் (வயது 71). அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தற்போது தினகரன் அணியில் அ.ம.மு.க. நகர செயலாளராக உள்ளார்.
இவரது மனைவி விஜயலட்சுமி (65). இருவரும் இன்று காலை காரில் சென்னை ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு சென்றனர். டிரைவர் வீரமணி (40) காரை ஓட்டிவந்தார்.
காலை 6 மணிக்கு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் அருகே விண்ண மங்கலம் என்ற இடத்தில் வந்தபோது முன்னாள் சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரியை முந்திசெல்ல டிரைவர் முயன்றார்.
அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி லாரிக்குள் புகுந்தது. கண்டெய்னர் லாரியின் அடிப்பகுதியில் கார் சிக்கியதால் நொறுங்கி தீப்பொறி பறந்தது.
சுமார் 25 மீட்டர் தூரம் கார் இழுத்து செல்லப்பட்டது. அதிர்ச்சியடைந்த லாரி டிரைவர் திடீர் பிரேக் போட்டு லாரியை நிறுத்தினார்.
இதனையடுத்து ஆம்பூர் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கிரேன் மூலம் லாரியை நகற்றி காரை வெளியே கொண்டுவந்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் 3 பேர் உடல்களும் மீட்கப்பட்டது.
உடல்களை ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆம்பூர் தாலுகா போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் பெங்களூரு-சென்னை மார்க்கத்தில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.