பாட்னா:
பீகார் மாநிலம் சமாஸ்டிபூர் மாவட்டம் ஷகார்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹரேராம் யாதவ் (50). ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் இன்று காலை ஹன்சான்பூர் காவல் நிலைய எல்லைப்பகுதிக்கு உள்பட்ட சீஹி என்ற பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் யாதவை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஒருவரை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.
சொந்த பகை காரணமாக யாதவை சுட்டுக்கொன்றதாக போலீசாரிடம் கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கொலைக்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.