கோப்புபடம் 
செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் பொங்கலூரில் குளம் உடையும் அபாயம்

பொங்கலூர் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக புத்தரச்சல் குளம் நிரம்பி வழிகிறது.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம், பொங்கலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குட்டைகள் நிறைந்து திறந்து விடப்படும் மழைநீர் வீரபாண்டி-கோவில்வழி வழித்தடத்தில் உள்ள ஓடைக்கு வந்து சேர்கிறது. அங்கிருந்து சபரி ஓடையில் தாராபுரம் ரோடு, காங்கயம் ரோட்டை கடந்து நொய்யலை நோக்கி பயணிக்கிறது.

முழுக்க மாநகராட்சி பகுதியில் பாயும் இந்த ஓடையை மழைக்கு முன்பாக தூர்வார  நடவடிக்கை எடுக்கவில்லை. தூர்வாரி ஓராண்டுக்கு மேலாகி விட்டதால் குடியிருப்புகள் ஒட்டி இருப்பதால் குப்பை நிறைந்து காணப்படுகிறது. செடிகள் அதிகளவில் வளர்ந்து இருபுறமும் முட்புதர் மண்டி கிடக்கிறது. 6 முதல் 8 அடி ஓடை குறுகி, சிறிய சாக்கடை கால்வாய் போல் மாறியுள்ளது.

கனமழை பெய்து மழைநீர் வெள்ளமென வந்தால் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து விடும் நிலை உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் ஓடையை நேரில் பார்வையிட்டு தூர்வாரும் பணியை முடுக்கி விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பொங்கலூர் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக  புத்தரச்சல் குளம் நிரம்பி வழிகிறது. இந்த குளம் சில ஆண்டுகளுக்கு முன் பெய்த மழையால் சேதம் அடைந்தது. தற்போது குளம் முழுக்க முட்புதர்கள், புதர்ச்செடிகள் மண்டிக்கிடக்கிறது.

குளத்திற்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. குளம் நிரம்பி உள்ளதால் அதில் இருந்து உபரி நீர் வெளியேறுகிறது. மேலும் மழை நீடிக்கும் பட்சத்தில் குளம் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. குளம் உடைந்தால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் சரியத் துவங்கும்.

இதனால் வரும் கோடை கால தண்ணீர் தேவையை சமாளிப்பது விவசாயிகளுக்கு சிரமமாக இருக்கும். குளத்தை சரி செய்யாதது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.