வேலூர்:
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளில் சத்துணவு சாப்பிடும் நபர்களுக்கு அரிசி, பருப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டன. மாணவர்கள் பள்ளி அடையாள அட்டையுடன் பெற்றோருடன் வந்து அரிசி, பருப்பு பொருட்கள் வாங்கி செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் வரை சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு கடந்த 13-ந்தேதி முதல் அரிசி, பருப்பு அடங்கிய பை வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சத்துணவுத்திட்ட அதிகாரிகள் கூறுகையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 394 பேருக்கு அரிசி, பருப்பு அடங்கிய பை வழங்கப்பட உள்ளது. 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களுக்கு 3 கிலோ அரிசி, 1 கிலோ 200 கிராம் பருப்பு, 6 முதல் 8 வரை படிக்கும் மாணவர்களுக்கு 4 கிலோ 650 கிராம் அரிசி, 1 கிலோ 250 கிராம் பருப்பு வழங்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.