வாஷிங்டன்:
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியான ரெக்ஸ் டில்லர்சன் முதல் முறையாக அடுத்த வாரம் இந்தியாவிற்கு வருகிறார். இதையொட்டி அவர் நேற்று வாஷிங்டனில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியா அமெரிக்காவின் மிகச்சிறந்த நட்பு நாடாகும். சீனாவின் நடவடிக்கைகள் உலக அளவிலான விதிமுறைகள் மற்றும் சட்டத்திற்கு புறம்பானதாக உள்ளது. குறிப்பாக தென் சீனக் கடல் பகுதியில் அதன் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மிகவும் மோசமானது. அவர்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இந்தியா நின்று போராடும்.
சீனாவுடன் நல்லுறவு வைத்துக்கொள்ளவே அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் நம் நட்பு நாடுகளுடன் சீனா வன்முறையில் ஈடுபடுவது சரியல்ல.
இதுபோன்ற நேரத்தில் இந்தியாவிற்கு உலகத்தில் நம்பகமான ஒரு நட்பு நாடு தேவை. அந்த நட்பு நாடாக அமெரிக்கா இருக்கும் என உறுதி அளிக்கிறேன். இரு நாடுகளும் பொது மக்களின் நன்மைக்காக பாடுபடுகிறது. இந்தியாவில் உள்ள இளைஞர்களின் சக்தி உலக அரங்கில் நாட்டிற்கு மிகுந்த மதிப்பை தேடி தரும்.
பரந்து விரிந்து கிடக்கும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் வளத்தை அதிகப்படுத்துவது இந்தியா மற்றும் அமெரிக்காவின் கடமையாகும்.
இவ்வாறு ரெக்ஸ் டில்லர்சன் பேசினார்.