மும்பை:
மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக ஆயுதம் பதுக்கிய வழக்கில் நடிகர் சஞ்சய்தத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் 2 ஆண்டுகள் சிறை தண்டணையை ஏற்கனவே கழித்து விட்டதால் தீர்ப்புக்கு பின் மீதம் உள்ள 3 ஆண்டு தண்டனையை அனுபவித்தார்.
அப்போது அவர் 2 முறை பரோலில் விடுதலையாகி வந்து குடும்பத்தினரை சந்தித்தார். ஒரு முறை அவருக்கு வெளியில் இருந்தபடியே பரோல் நீடிப்பு செய்யப்பட்டது. மொத்தம் 90 நாட்கள் பரோலில் இருந்தார். மேலும் முன் கூட்டியே நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.
சஞ்சய்தத் விடுதலையில் விதி மீறல் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு நீதிபதி இதுபற்றி பதில் அளிக்குமாறு மராட்டிய அரசுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து மராட்டிய அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் அசு தோஷ் கும்பகோனி மும்பை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் சஞ்சய்தத்துக்கு பரோல் அளிக்கப்பட்டதில் விதி மீறல் நடைபெறவில்லை. அதே சமயம் விதி மீறல் நடந்து இருப்பதாக கோர்ட்டு கருதினால் மீண்டும் அவரை ஜெயிலுக்கு அனுப்பலாம் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சவந்த் கூறுகையில், சஞ்சய்தத்தை மீண்டும் ஜெயிலுக்கு அனுப்பும் நோக்கத்தில் நாங்கள் செயல்படவில்லை. இது போன்ற கேள்விகள் எதிர்காலத்தில் எழக் கூடாது என்று விரும்புவதாக தெரிவித்தார்.