போரூர்:
சாலிகிராமம் தேவராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி மோனிஷா (39). சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார்.
குமரேசன் நேற்று முன்தினம் மனைவி மற்றும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தசரதபுரம் மெயின் ரோடு அருகே வந்தபோது அவ்வழியே சென்ற கார் ஒன்று குமரேசன் மோட்டார்சைக்கிள் மீது உரசியது. இதில் நிலை தடுமாறினார்கள்.
ஆத்திரம் அடைந்த மோனிஷா காரில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது காரில் இருந்தவர் திடீரென மோனிஷாவை தாக்கிவிட்டு சென்றார்.
இதுகுறித்து மோனிஷா விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சிவகுமார் காரின் எண்ணை கொண்டு மோனிஷாவை தாக்கி விட்டு தப்பி சென்றவர் சாலிகிராமம் சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் என்பதை கண்டு பிடித்தார்.
இதையடுத்து வெங்கட்ராமன் விசாரணைக்காக விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் வந்தார். அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.