போராட்டம் 
செய்திகள்

முசிறியில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வென்றெடுக்கும் கையெழுத்து இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாலை மலர்

முசிறி:

முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வென்றெடுக்கும் கையெழுத்து இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். சங்க மாநில செயலாளர் தங்கவேல், ஊரக வளர்ச்சி துறை வட்டார பொருளாளர் ரெங்கராஜ், நிர்வாகிகள் காராளன், செல்வராஜ், கல்யாணி உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்குவதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதனை தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் ஓய்வூதியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் பாரி நன்றி கூறினார்.