செய்திகள்

நவாஸ் ஷெரீப் மீது தேசத் துரோக வழக்கு - பாகிஸ்தானின் 3 மாகாண சபைகளில் தீர்மானம் நிறைவேற்றம்

மும்பை குண்டு வெடிப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது தேசத் துரோக வழக்கு தொடர 3 மாகாணங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #NawazSharif

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் சில வெளிநாட்டவர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் குறித்து கடந்த சனிக்கிழமை கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப், “பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பாட்டில் இருக்கின்றன. அவர்களை அரசு சாராதவர்கள் என்று கூறலாம். அவர்கள் எல்லை தாண்டிச்சென்று, மும்பையில் தாக்குதல் நடத்தி மக்களில் 150 பேரை கொல்ல நாம் அனுமதித்து இருக்கலாமா? இதை எனக்கு விளக்குங்கள். இந்த வழக்கு விசாரணையை நம்மால் முடிக்க முடியாதா, என்ன?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அவருடைய இந்த கருத்து பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி லாகூர் ஐகோர்ட்டில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்நிலையில், நவாஸ் ஷெரீப்புக்கு கண்டனம் தெரிவித்தும், அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் சிந்து, பஞ்சாப் மற்றும் கைபர் பாக்துன்க்வா மாகாண சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாகாண சபையில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் ‘துரோகி நவாஸ் ஷெரீப்பை தூக்கிலிடுங்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Nawazsharif #treasoncase 

SCROLL FOR NEXT