தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் இலவச மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் அருண்
சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் அருகில் மருத்துவமனை இல்லாத இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக அவர்கள் வசிக்கும்
இடங்களுக்கு அருகிலேயே 18-க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் இலவச மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்களில் ரத்த
அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற தொற்றா நோய்களுக்கு மருத்துவ சிகிச்சையும், உணவுமுறை ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. மேலும்
ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கண்டறிதல், காய்ச்சல் கண்டறிதல், சளி பரிசோதனை, இருதய நோய் பரிசோதனை போன்ற அனைத்தும்
இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து பதிவு அட்டை வழங்கி
மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் கர்ப்பிணிகளுக்கு பெண் மருத்துவர்களால் அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே பொதுமக்கள் காய்ச்சல், சளி,
இருமல் போன்றவை இருந்தாலும் மருந்து கடைகளிலோ அல்லது போலி மருத்துவர்களிடமோ சுய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் தாங்கள்
வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே நடைபெறும் இலவச மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று
பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை என் 04633 290548 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.