போராட்டம் 
செய்திகள்

வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

பூந்தமல்லி:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கொரோனா தொற்று பரவுவதை கருத்தில் கொள்ளாமல் திட்ட பணிகளை விரைந்து முடிக்க நிர்ப்பந்திப்பதை கைவிடக்கோரியும், ஊராட்சி செயலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்கிடவும், கணினி உதவியாளர்கள், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி செயலாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இன்றும் (புதன்கிழமை) தொடர்ந்து நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடந்த உள்ளிருப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் வட்ட கிளை செயலாளர் விஜயன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ஜார்ஜ், மாவட்ட பொருளாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராம்குமா, லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.