செய்திகள்

கணித தேர்வு சரியாக எழுதாததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை

செங்குன்றம் அருகே கணித தேர்வு சரியாக எழுதாததால் மன உளைச்சலில் இருந்த பிளஸ்-1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

செங்குன்றம்:

செங்குன்றம் அருகே உள்ள எம்.ஏ.நகர் கண்ணகி நகரை சேர்ந்தவர் சர்மிளா (வயது 16). உறவினர் வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

கடந்த 20-ந்தேதி கணித தேர்வு நடந்தது. இதனை சர்மிளா சரியாக எழுதவில்லை என்று தெரிகிறது.

இதுபற்றி அவர் தோழிகளிடமும், உறவினர்களிடமும் கூறி வருத்தம் அடைந்தார். உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறி அடுத்த தேர்வை நன்றாக எழுதும்படி கூறி வந்தனர்.

எனினும் மனஉளைச்சலில் இருந்த சர்மிளா தொடர்ந்து கணித தேர்வு குறித்து புலம்பியபடி இருந்தார். நேற்று மாலை அவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து செங்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் சர்மிளா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews