புதுச்சேரி:
புதுவை பூமியான்பேட் புது தெருவை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (வயது 24). இவருக்கு இந்துமதி என்ற மனைவியும், 1½ வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.
வெங்கடாஜலபதி ரெட்டியார்பாளையம் லாம்பர்ட் சரவணன் நகரில் உள்ள தனியார் பால் பண்ணையில் பால் கறவை தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள வெங்கடாஜலபதி அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம்.
அதுபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கடாஜலபதி மனைவியுடன் தகராறு செய்து விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
வெகுநேரமாக வெங்கடாஜலபதி வீடு திரும்பாததால் அவரது மனைவி இந்துமதி கணவர் வேலை பார்க்கும் பால்பண்ணைக்கு சென்றார். அங்கிருந்த வெங்கடாஜலபதியை வீட்டுக்கு வருமாறு இந்துமதி அழைத்தார். ஆனால், வெங்கடாஜலபதி வீட்டுக்கு வர மறுத்து விட்டார். இதனால் இந்துமதி வீடு திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று காலை வெங்கடாஜலபதி தான் வேலை பார்க்கும் பால்பண்ணை அருகே ஒரு மரத்தில் தூக்கு போட்டு பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து இந்துமதி ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.