மரணம் 
செய்திகள்

ரெட்டியார்பாளையத்தில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி

ரெட்டியார் பாளையத்தில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியானார்.

புதுச்சேரி:

புதுவை கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகர் கவிஞர் தமிழ் ஒளி வீதியை சேர்ந்தவர் சேகர். (வயது 47). கட்டிட தொழிலாளி. இவருக்கு வள்ளி என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று சேகர் ரெட்டியார் பாளையம் கம்பன் நகர் மெயின் ரோடு செல்லான் பாப்பு நகரில் ஒரு வீட்டில் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வீட்டின் வழியே சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் எதிர்பாராத விதமாக சேகரின் உடல் உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட சேகர் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சேகர் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகமுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.