அரசுப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி. 
செய்திகள்

சிவப்பு சட்டை அணிந்து அரசுப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூரில் சிவப்பு சட்டை அணிந்து அரசுப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாலை மலர்

கரூர்:

கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் கரூர் கிளை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட பொருளாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.

நிர்வாகி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், 21 மாத ஊதியக்குழு நிலுவைத்தொகையை உடனே வழங்கிட வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். மத்திய அரசுக்கு இணையான போனஸ் ரூ.7,000 வழங்க வேண்டும்.

நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். ஆட்குறைப்பு, துறை குறைப்பு தொடர்பான ஆதிசேஷய்யா கமிட்டியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைவரும் சிவப்பு சட்டை அணிந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இதில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணை தலைவர்கள் ராமலிங்கம், உதயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.