சென்னை:
சென்னையில் 3,300 மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் பல பஸ்கள் பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் ஓடுகிறது.
புதிய பஸ்கள் விடப்படும் போது பழைய பஸ்கள் மாற்றப்படுகிறது. மற்ற மாநில தலைநகரங்களில் ஓடும் மாநகர பஸ்கள் கவர்ச்சியாகவும் நல்ல இருக்கைகள் கொண்டதாக உள்ளது. அவற்றுடன் ஒப்பிடும் போது சென்னையில் ஓடும் பஸ்கள் மிக மோசமானதாகவே உள்ளது.
தற்போது சென்னையில் ஓடும் மோசமான நிலையில் உள்ள பஸ்களுக்கு பதில் புதிதாக சொகுசு பஸ்கள் விட போக்குவரத்து கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தாழ்தள படிக்கட்டுகள், தானாகவே மூடித்திறக்கும் கதவுகள், இருவர் அமரக் கூடிய இருக்கைகள் இடம் பெற்றுள்ளது. இந்த பஸ்கள் கரூர், பொள்ளாச்சியில் உள்ள பஸ் பாடி கட்டும் தொழிற்சாலையில் தயாராகி வருகிறது.
மொத்தம் 250 பஸ்கள் மாற்றப்பட்டு அவற்றுக்குப் பதில் புதிய பஸ்கள் விடப்படுகிறது. புதிதாக விடப்படும் பஸ்கள் சிவப்பு வண்ணத்தில் இருக்கும். இதன் மூலம் மாநகர பஸ்களின் நிறம் மாறுகிறது.
புதிதாக தயாரான சொகுசு பஸ்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த புதிய பஸ்கள் பொங்கல் முதல் சென்னை நகரில் ஓடும் என்றும் முதலில் 250 பஸ்கள் இயக்கப்படும். அதன்பிறகு படிப்படியாக 986 புதிய பஸ்கள் விட திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே சென்னை பயணிகள் இனி உடைந்த இருக்கைகள், உடைந்த படிக்கட்டுகள், பயமுறுத்தும் வகையில் கம்பி நீட்டிக் கொண்டு இருக்கும் ஜன்னல் போன்ற அவலங்கள் இல்லாத புதிய பஸ்களில் பயணம் செய்யலாம்.
தமிழகத்தில் சென்னை தவிர மற்ற நகரங்களில் தனியார் பஸ்கள் அதிக அளவில் ஓடுகின்றன. சென்னையில் மட்டுமே தனியார் பஸ்சுக்கு அனுமதி இல்லை. இதனால் பயணிகள் போக்குவரத்தில் அரசு பஸ்கள் பெரும் பங்கு வகிக்கிறது. #TNBus